மலேசியாவில் சட்டவிரோதக் கந்துவட்டிக்காரர்கள், கடன் வாங்கியவர்களின் வீட்டின் மீது பெயிண்ட் ஊற்றிச் சேதப்படுத்துவதுடன், அதற்குரிய ‘சேவைக் கட்டணத்தையும்’ (Service Fee) பாதிக்கப்பட்டவர்களிடமே வசூலிக்கும் புதிய நூதன மிரட்டல் உத்தியைக் கையாண்டு வருவதாக மசீச (MCA) பொதுச் சேவை மற்றும் புகார்கள் பிரிவின் தலைவர் டத்தோஸ்ரீ மைக்கல் சோங் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
இன்று மசீச தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மைக்கல் சோங், கோ மிங் தாய் (Goh Ming Tai) என்ற நபர் எதிர்கொண்ட வினோதமான சம்பவத்தை விவரித்தார்:
“பாதிக்கப்பட்ட நபர் 1,000 ரிங்கிட் மட்டுமே கடன் வாங்கியிருந்தார். ஆனால் கந்துவட்டிக்காரர்கள் 8,000 ரிங்கிட் திருப்பித் தருமாறு மிரட்டியுள்ளனர். இந்த விவகாரத்தில் நான் தலையிட்ட பிறகு, அசல் தொகையான 1,000 ரிங்கிட்டை மட்டும் பெற்றுக்கொள்ள அவர்கள் சம்மதித்தனர். ஆனால், கூடுதலாக 700 ரிங்கிட் தரவேண்டும் என்று அடம் பிடித்தனர். காரணம் கேட்டபோது, ‘உங்கள் வீட்டின் மீது பெயிண்ட் ஊற்றுவதற்காக நாங்கள் ஆட்களை அனுப்பினோம் அல்லவா, அதற்கான கூலியை நீங்கள்தான் தரவேண்டும்’ என்று மிகத் திமிராகக் கூறியுள்ளனர்.”
அதே நபர் வாங்கிய மற்றொரு கடனில், போலீஸ் புகாரைத் தொடர்ந்து முடக்கப்பட்ட தங்களது வங்கி கணக்கு இழப்பீட்டைக் காரணம் காட்டி, 1,000 ரிங்கிட் கடனுக்கு 21,000 ரிங்கிட் வட்டி கேட்டு அலோங் கும்பல் மிரட்டி வருகிறது.
இன்றைய செய்தியாளர் சந்திப்பில் சமர்ப்பிக்கப்பட்ட 5 வழக்குகளில், 4 வழக்குகள் வீடுகளுக்குத் தீ வைக்கப் போவதாக விடுக்கப்பட்ட மிரட்டல்களாகும். லோ (Loh) என்ற 48 வயது நபர் கடன் வாங்கிவிட்டு கடந்த ஓராண்டாகத் தலைமறைவாக உள்ள சூழலில், ஐந்து வெவ்வேறு கந்துவட்டிக் கும்பல்கள் அவரது குழந்தைகளின் புகைப்பட முகநூலில் (Facebook) பதிவிட்டு, வீட்டைக் கொளுத்திவிடுவோம் என மிரட்டி வருகின்றன. “குழந்தைகள் என்ன குற்றம் செய்தார்கள்? அவர்களை ஏன் எரிக்கத் துணிகிறார்கள்?” என்று மைக்கல் சோங் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
சமீபத்தில் ஜோகூரில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபருக்கு நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த போதிலும், இந்தக் கும்பல்களின் அட்டகாசம் அடங்கவில்லை என்று சாடிய அவர், இனிவரும் காலங்களில் வீடுகளுக்குத் தீ வைக்கும் மிரட்டல்களைக் காவல்துறை ‘கொலை முயற்சி’ (Attempted Murder) வழக்காகப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
‘ஸ்கேமர் அலோங்’ (Scammer Alongs):
தற்போது எவ்விதப் பேச்சுவார்த்தைக்கும் உடன்படாத “ஸ்கேமர் அலோங்” என்ற புதிய வகை கந்துவட்டிக்காரர்கள் உருவாகியுள்ளனர் என்று எச்சரித்த சோங், அலோர் ஸ்டாரைச் சேர்ந்த ஒரு வட்டிக்குடைப்பிடி நபர் 2,700 ரிங்கிட் கடனுக்கு தற்பொழுது 88,000 ரிங்கிட் கேட்டு மிரட்டி வருவதாகவும், சமரசப் பேச்சுவார்த்தைக்கு மறுத்து வருவதாகவும் கூறினார்.
இந்த விவகாரங்கள் தொடர்பான முழு விபரங்களையும் நாளை புக்கிட் அமானில் (Bukit Aman) உள்ள குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) துணை இயக்குநரிடம் நேரில் வழங்கி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார். மசீச பிரிவின் புள்ளியியல் தரவுகளின்படி, நடப்பு 2026-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை மொத்தம் 16 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய 159 கந்துவட்டிப் புகார்கள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.