உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியையோட்டி நடத்தப்பட்ட சட்டவிரோத சூதாட்டத்தை துடைத்தொழிக்க மேற்கொள்ளப்பட்ட OPS SOGO X1 அதிரடிச் சோதனையில் மொத்தமாக 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசிய தொடர்பு – பல்லூடக ஆணையம் (MCMC) உட்பட பல்வேறு அமைப்புகளின் ஒத்துழைப்போடு இம்மாதம் 11 தேதி முதல் மொத்தமாக 52 சோதனைகள் நடத்தப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு இலாகா இயக்குனர் டத்தோ எம்.குமார் தெரிவித்தார்.
இதில் சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 54 ஆண்கள், 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ரொக்கத் தொகை 25,684 ரிங்கிட் உட்பட மொத்தமாக 488,582 ரிங்கிட் இச்சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து இப்போட்டியையோட்டி சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட 42 அகப்பக்கங்கள், சமூக தளப் பக்கங்களை போலீஸ் தரப்பு அடையாளம் கண்டுள்ளது.
மலேசிய தொடர்பு – பல்லூடக ஆணையம் (MCMC) ஒத்துழைப்போடு அந்த பக்கங்களின் உள்ளடக்கங்கள் முடக்கப்படும்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட அனைவரும் சம்பந்தப்பட்ட மாவட்ட போலீஸ் தலைமையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
1953 சூதாட்ட தடுப்புச் சட்டம் பிரிவு 6(1), 6(3), பொது சூதாட்ட மையத் தடுப்புச் சட்டம் பிரிவு 4(1)(C) ஆகியவற்றின் கீழ் இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அவர் தமதறிக்கையில் அவர் விவரித்தார்.
எனவே இதுபோன்ற குற்றச் செயல்களை தடுப்பதற்கு பொதுமக்கள் அமலாக்க தரப்புக்கு உறுதுணையாக இருக்குமாறு குமார் குறிப்பிட்டார்.