ஜோகூர்:
பண்டார் டத்தோ ஆன் (Bandar Dato’ Onn) பகுதியில், நாளை (ஜூன் 20) அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படவிருந்த புதிய நாசி கண்டார் உணவகம் ஒன்றின் மீது, இன்று அதிகாலை முகமூடி அணிந்த இரு நபர்கள் எரிபொருள் மற்றும் சிவப்பு பெயிண்ட் ஊற்றி தீ வைத்துள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து ஜோகூர் பாரு தெற்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ரவூப் செலாமத் கூறுகையில், “இன்று அதிகாலை 3:59 மணியளவில், உணவகத்தை நடத்தும் 30 வயதுடைய உள்ளூர்வாசி ஒருவரிடமிருந்து எங்களுக்குப் புகார் வந்தது. உணவகத்தின் சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதிகாலை 3:34 மணியளவில் ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்து வந்த இரண்டு சந்தேக நபர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியது தெரியவந்துள்ளது,” என்றார்.
இந்தத் தீ வைப்பு சம்பவத்தால் சுமார் 2,00,000 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை,” என்றும் அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டம் பிரிவு 436-இன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால், பொதுமக்கள் ஜோகூர் பாரு தெற்கு மாவட்ட போலீஸ் தலைமையக ஹாட்லைன் எண்ணிற்கு (07-2182323) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், அதிகாலை 3:43 மணிக்கு அவசர அழைப்பு வந்ததை அடுத்து, தெப்ராவ் மற்றும் கெம்பாஸ் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
இருப்பினும், தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பாகவே, அங்கிருந்த 8 தீயணைப்பு உருளைகளைப் (Fire Extinguishers) பயன்படுத்தி தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
நாளை நடைபெறவிருந்த உணவகத் திறப்பு விழாவை முன்னிட்டு, வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என அந்த உணவகம் இதற்கு முன்பு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.