Offline
Menu

LATEST NEWS

நாடு முழுவதும் தொழிற்சங்க திட்டங்களுக்காக அரசாங்கம் 6.1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அமைச்சர் ரமணன்
By Administrator
Published on 06/25/2026 09:00
News

தொழிற்சங்கங்களின் பங்கு மற்றும் அவற்றின் திறனை வலுப்படுத்தும் முயற்சியாக, இந்த ஆண்டு நாடு முழுவதும் தொழிற்சங்க விவகாரங்களுக்கான திட்டத்தை (PHEKS) செயல்படுத்துவதற்காக அரசாங்கம் 6.1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற தீபகற்ப மலேசியாவிற்கான 2026-ஆம் ஆண்டின் PHEKS மானியங்கள் வழங்கும் விழாவில், தீபகற்ப மலேசியாவில் உள்ள 315 தொழிற்சங்கங்களுக்கு மொத்தம் 2.88 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

ஒட்டுமொத்த 6.1 மில்லியன் ரிங்கிட்டில், 3.5 மில்லியன் ரிங்கிட் தொழிற்சங்கங்களின் பயிற்சி, கல்வி, ஆராய்ச்சி, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்காகவும், மீதமுள்ள 2.6 மில்லியன் ரிங்கிட் சமூக நலன் மற்றும் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (சி.எஸ்.ஆர்) திட்டங்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதிலும், தொழிற்சங்க நடவடிக்கைகளில் அவர்களின் ஈடுபாட்டை அதிகரிப்பதிலும் தொழிற்சங்கங்களை மேம்படுத்துவது அரசின் ஒரு பகுதியாகும் என்று குறிப்பிட்ட அமைச்சர், உறுப்பினர்கள் சர்வதேச அளவிலான மாநாடுகளில் பங்கேற்பது உட்பட பல்வேறு செயல்பாடுகளில் அதிக வாய்ப்புகளை வழங்க தொழிற்சங்கங்கள் முன்னின்று செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தொழிற்சங்கங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்கங்களில் இணைவதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார். வழங்கப்பட்ட நிதியை தொழிற்சங்கங்கள் பயனுள்ள முறையில் கையாண்டால், எதிர்காலத்தில் கூடுதல் நிதி வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Comments

More news