பேராக், செலாமாவில் தம்மைக் கைது செய்ய முயன்ற இரண்டு போலிஸ் அதிகாரிகளைக் கத்தியால் தாக்கிவிட்டுத் தப்பியோடிய 39 வயது போதை ஆசாமி ஒருவரைப் போலிசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஈஜோக், கம்போங் சுங்கை ஜெர்னிஹ் பகுதியில் உள்ள ஒரு குடிசையில் போதைக்கு அடிமையான நபர் ஒருவர் இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், கடந்த செவ்வாய்க்கிழமை போலிசார் அங்குச் சோதனையிட்டனர்.
அப்போது, திடீரென வன்முறையில் இறங்கிய அந்தச் சந்தேகநபர், போலிசாரைக் கூர்மையான கத்தியால் தாக்கிவிட்டுக் தப்பியோடியதாகப் பேராக் மாநிலப் போலிஸ் தலைவர் டத்தோ முகமட் ஆல்வி ஸைனால் அபிடின் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த 44 வயது சார்ஜன்ட் மற்றும் 27 வயது கான்ஸ்டபிள் ஆகிய இரு போலிசாரும் தைப்பிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது வீடு திரும்பியுள்ளனர்.
சந்தேகநபரைக் கைது செய்ய அப்பகுதியின் நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளில் சாலைத் தடுப்புகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வரும் வேளையில், இந்த வழக்கு கொலை முயற்சி என குற்றவியல் சட்டம் பிரிவு 307-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.