Offline
Menu

LATEST NEWS

221 மில்லியன் பொய்க்குற்றச்சாட்டு; சட்ட நடவடிக்கை எடுக்கிறது ம.இ.கா
By Administrator
Published on 07/11/2026 09:00
News

கூலாய்:

முன்னதாக தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தில் ம.இ.கா.விற்கு அரசாங்கம் மூலம் 221 மில்லியன் வழங்கப்பட்டதாக வெளியான செய்திகளை முற்றிலும் மறுத்துள்ள ம.இ.கா. தலைவர் டான்ஶ்ரீ எஸ். விக்கினேஸ்வரன், அந்தத் தகவல் உண்மைக்கு புறம்பானது என்றும் தெரிவித்தார்.

கூலாயில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவறான தகவலை வெளியிட்ட இரண்டு இணையச் செய்தித் தளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கட்சியின் வழக்கறிஞர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார். தவறான செய்தியை திருத்த மறுத்தால் அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரித்தார்

அவர் விளக்கமளிக்கையில், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிதி ம.இ.கா.விற்கு அல்ல; மாறாக, கட்சியின் கல்வி அமைப்பான MIED நிர்வகிக்கும் AIMST பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளுக்காக ஆண்டுதோறும் 25 மில்லியன் ஒதுக்கப்பட்டதாக தெரிவித்தார். அந்த நிதியின் ஒவ்வொரு செலவும் நிதி அமைச்சின் கண்காணிப்பு மற்றும் தணிக்கைக்கு உட்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தலைமையிலான அமைச்சரவையில் இந்த நிதி ஒப்புதல் பெற்றதாகவும், முதல் ஆண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட RM25 மில்லியனில் 15 மில்லியன் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசில் 2022 முதல் 2026 வரையிலான ஒவ்வொரு ஆண்டும் முழு 25 மில்லியன் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், முன்னாள் பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான காலத்தில், சுமார் 15 ஆண்டுகள் பழமையான AIMST பல்கலைக்கழகத்தின் பழுதுபார்ப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக ஒருமுறை மட்டும் RM15 மில்லியன் சிறப்பு நிதி வழங்கப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்தார்.

Comments