சரமாரி தாக்குதல் ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தக கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதையடுத்து அந்நாட்டின் ராணுவ கட்டமைப்புகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் சரமாரியாக தாக்கி வருகிறது. மேலும், ஈரான் துறைமுகங்களை முடக்கும் விதமாக ஹோர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க கடற்படை தனது முற்றுகை நடவடிக்கையை மீண்டும் நேற்று முதல் தொடங்கியது. தங்களது முற்றுகையை மீறி ஈரான் துறைமுகங்களுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்கா எச்சரித்தது. இந்த நிலையில் அமெரிக்க கடற்படையின் முற்றுகையை மீறி ஈரான் துறைமுகத்துக்கு செல்ல முயன்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தியில் குராசோ நாட்டு கொடியுடன் எம்.டி. பெல்மா என்ற எண்ணெய் கப்பல் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் அந்த கப்பல் சேதமடைந்தது.இதன்மூலம் கப்பலை அமெரிக்க கடற்படை தடுத்து நிறுத்தியது.இது தொடர்பாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு கூறும்போது, ஈரானின் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை மீற முயன்ற, சரக்குகள் இல்லாத எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க விமானம் தாக்குதல் நடத்தி அதைச் செயலிழக்கச் செய்தது. கப்பலின் புகைபோக்கிக்குள் ஹெல்பயர் ஏவுகணைகளைச் செலுத்தி தாக்குதல் நடத்தப்பட்டது. இனி அந்த கப்பல் ஈரானுக்கு செல்ல முடியாது.