ஒரே நாளில் இரு தனித்தனி சம்பவங்கள்…ஆண், பெண், 2 வயது குழந்தை என மூன்று உயிர்கள் பலி!
பாகான் டத்தோ பகுதியில் அமைந்துள்ள சுல்தான் நஸ்ரின் ஷா பாலத்தில் நேற்று அடுத்தடுத்து நிகழ்ந்த இரு தனித்தனி சம்பவங்கள், அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளன.
பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்ததாகக் கூறப்படும் மூவர் தொடர்பான சம்பவத்தில், 42 வயதான ஆண் ஒருவர் மற்றும் 2 வயது சிறுவன் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், ஒரு பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்தார் என பேராக் மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் டத்தோ சயானி சைடுன் கூறினார்.
முதல் சம்பவம் நேற்று காலை 11.36 மணியளவில் பதிவானது. பாலத்தின் நடுப்பகுதியில் இருந்து 42 வயதான முகமட் நூர் பெர்டாவுஸ் பின் முகமட் மொக்தார் ஆற்றில் விழுந்ததாக காவல்துறையிடமிருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, ஊத்தான் மெலிந்தாங் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
நண்பகல் 12.11 மணியளவில் சம்பவ இடத்தை அடைந்த மீட்புக் குழுவினர், பாலத்தின் ஓரத்தில் பாதிக்கப்பட்டவருக்குச் சொந்தமான மோடெனாஸ் Z15 GT ரக மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டனர்.
இதையடுத்து, தீயணைப்புத் துறையின் அலுமினிய மீட்புப் படகுகள், மலேசிய குடிமைப் பாதுகாப்புப் படையின் படகு மற்றும் பிற மீட்புக் குழுக்கள் இணைந்து, பாதிக்கப்பட்டவர் விழுந்ததாகக் கருதப்படும் இடத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் சுற்றளவில் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.