ஈப்போவில் உள்ள தஞ்சோங் ரம்புத்தான் முதியோர் இல்லத்தில் வசித்து வந்த 54 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பராமரிப்பாளர் ஒருவரைச் சேர்த்து மொத்தம் ஐந்து பேரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
பேராக் காவல்துறைத் தலைவர் அல்வி ஜைனல் அபிடின் தெரிவித்ததாவது, ஆரம்பகட்ட விசாரணையில் உயிரிழந்தவரின் உடலில் பல்வேறு காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சம்பவத்தின் உண்மையான காரணம் மற்றும் இதில் தொடர்புடையவர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
உயிரிழப்புக்கான துல்லியமான காரணத்தை அறிய பிரேதப் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாகவும், இந்த வழக்கு தண்டனைச் சட்டம் பிரிவு 302-ன் கீழ் கொலைக் குற்றமாகப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நேற்று பிற்பகல் சுமார் 2 மணியளவில், தஞ்சோங் ரம்புத்தான் சுகாதார மைய மருத்துவப் பணியாளர்கள் அந்த நபர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.
இதுகுறித்து உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிரவோ அல்லது வதந்திகளைப் பரப்பவோ வேண்டாம் என்று பொதுமக்களிடம் அல்வி ஜைனல் அபிடின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.