போக்குவரத்து அமைச்சராக பொறுப்பேற்று கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பொதுப்போக்குவரத்து மற்றும் இரயில் போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் அந்தோனி லோக் (Anthony Loke) தெரிவித்துள்ளார்.
மெலெ மேல் ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்தார்.
2022-ஆம் ஆண்டின் இறுதியில் பிராசரானா (Prasarana) நிறுவனம் மிகவும் மோசமான நிலையில் இருந்ததாகவும், தொடர் பழுதுபார்ப்புகள் மற்றும் பராமரிப்புக் குறைபாடுகளால் பொதுமக்களின் நம்பிக்கை குறைந்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தாம் அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் போக்குவரத்து நிலையங்களில் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டதுடன், பராமரிப்புப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு கடுமையாக அறிவுறுத்தியதன் விளைவாக, தற்போது ஒட்டுமொத்தப் போக்குவரத்து மேலாண்மையும் மேம்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், நாட்டின் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது, பழைய உள்கட்டமைப்பு மற்றும் இணைப்புக் குறைபாடுகள் போன்ற சவால்கள் போக்குவரத்து முறையை முழுமையாக மாற்றுவதில் தடையாக உள்ளதாக அவர் விளக்கினார்.
நாட்டில் ஆண்டுதோறும் 700,000-க்கும் அதிகமான புதிய வாகனங்கள் விற்பனையாவதால் போக்குவரத்து நெரிசலைத் முழுமையாகக் கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளதுடன், பழைய வாகனங்களை அகற்றும் கொள்கையை (end-of-life vehicle policy) இப்போதைக்கு நடைமுறைப்படுத்துவது உகந்ததல்ல என்றும் அவர் கூறினார்.
மேலும், கிள்ளான் பள்ளத்தாக்கில் இணைப்பை மேம்படுத்த டிஆர்டி (DRT) சேவைகள் மற்றும் பேருந்து இணைப்புகள் விரிவுபடுத்தப்பட்டு வருவதாகவும், சரக்குப் போக்குவரத்தை இரயில் வலையமைப்புக்கு மாற்றுவது மற்றும் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதே அமைச்சின் முக்கிய இலக்குகள் என்றும் அந்தோனி லோக் மேலும் தெரிவித்தார்.