‘புடி மடானி’ (BUDI95) RON95 எரிபொருள் மானியத்தின் மாதவாரியான அளவை மீண்டும் 300 லிட்டராக உயர்த்த வேண்டும் என்றும், அதிகப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அதை 350 லிட்டராக அதிகரிக்க வேண்டும் என்றும் PKR கட்சியின் இளைஞர் பிரிவான ‘அங்காத்தான் மூடா கெஅடிலான்’ (AMK) அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆயர் கெரோவிலுள்ள ‘மலாக்கா அனைத்துலக வர்த்தக மையத்தில்’ நடைபெற்ற AMK தேசிய மாநாட்டில் கொள்கை உரை ஆற்றிய அதன் தலைவர் முஹமட் காமில் அகமத் முனிம் இக்கோரிக்கையை முன்வைத்தார்.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருப்பது மற்றும் நாட்டின் நிதிநிலை சீராக இருப்பதைக் சுட்டிக்காட்டிய அவர், மக்களுக்கு வழங்கி வரும் எரிபொருள் மானியக் கோட்டாவை உயர்த்துவதற்கு அரசாங்கத்திற்குப் போதிய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார்.
“நாங்கள் அளவில்லா மானியத்தைக் கேட்கவில்லை; மக்களின் அன்றாட வாழ்வின் யதார்த்தத்தைப் புரிந்துகொண்ட கொள்கையையே கேட்கிறோம். மானிய சீர்திருத்தங்கள் மக்களுக்குப் பலன் தரும் வகையில் அமைய வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.
வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (AI), பசுமைத் தொழில்நுட்பம், விண்வெளித் துறை மற்றும் இணையப் பாதுகாப்பு போன்ற மூலோபாயத் துறைகளில் மலாய் இளைஞர்கள் வெறும் பயனாளர்களாக மட்டும் இல்லாமல், உருவாக்குநர்களாகவும் உரிமையாளர்களாகவும் உருவெடுக்கப் பூமிபுத்ரா மேம்பாட்டுக் கொள்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.