Offline
Menu
சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை: 15 ஆண்டுகள் சிறை மற்றும் 10 பிரம்படிகள் தண்டனை!
By Administrator
Published on 08/28/2026 15:00
News

சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட 61 வயது தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 10 பிரம்படிகளும் விதித்து லஹாட் டத்து செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

வழக்கின் விசாரணை இரண்டாம் நாளாக இன்று நடைபெற்றபோது, குற்றம் சாட்டப்பட்ட நபர் தம்மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டார். வழக்கு விசாரணையின் முதல் நாளான நேற்று அரசுத் தரப்பில் 6 சாட்சிகள் ஆஜர்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கை விசாரித்த நீதிபதி சுஹைலா செலாக், குற்றவாளிக்கு இன்று முதல் அமலுக்கு வரும் வகையில் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 10 பிரம்படிகளும் விதித்துத் தீர்ப்பளித்தார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், கூனாக் (Kunak) பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இரவு 11.00 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் நடந்தபோது சிறுமிக்கு 12 வயதும் 3 மாதங்களும் மட்டுமே ஆகியிருந்தது. பெற்றோரின் விவாகரத்திற்குப் பிறகு சிறுமி தனது தந்தையின் பராமரிப்பில் வசித்து வந்துள்ளார்.

கடந்த 2025 பிப்ரவரி 7-ஆம் தேதி காலை 9:00 மணியளவில், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

குற்றவாளி மீதான குற்றச்சாட்டு குற்றவியல் சட்டக் கோட்பாட்டின் பிரிவு 376(3)-இன் கீழ் பதிவு செய்யப்பட்டது. இப்பிரிவின் கீழ் குற்றவாளிக்குக் குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 10 பிரம்படிகளுக்குக் குறையாமல் தண்டனையும் விதிக்கப்பட சட்டத்தில் இடமுண்டு.

2017-ஆம் ஆண்டு குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 26-இன் படி, சிறைக்காலத்தில் குற்றவாளிக்கு மறுவாழ்வு ஆலோசனைச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று கூடுதல் நிபந்தனையும் விதிக்கப்பட்டது.

சிறைத்தண்டனை முடிந்த பிறகு, அதே சட்டத்தின் பிரிவு 27-இன் படி, குற்றவாளி 2 ஆண்டுகள் காவல் துறையின் நேரடி கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

வழக்கறிஞர் எவரும் இன்றி ஆஜரான குற்றவாளி, தாம் குற்றத்தை ஒப்புக்கொண்டதைக் சுட்டிக்காட்டி குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு கோரினார்.

எனினும், அரசுத் தரப்புத் துணை வழக்கறிஞர் ஷரீஃப் ஐசாத் முர்னிசாம் (Sharif Aizad Murnizam) கடுமையான தண்டனையை வலியுறுத்திப் பேசினார்:

“பாதுகாக்க வேண்டிய தந்தையே தனது சொந்த மகளுக்கு எதிராக இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார். பிற ஆபத்துகளில் இருந்து மகளைப் பாதுகாக்க வேண்டிய கடமையில் இருந்த அவரே இக்குற்றத்தைச் செய்திருப்பதால், கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்’ என்று அவர் வாதிட்டது குறிப்பிடத்தக்கது.

 

Comments