Offline
Menu

LATEST NEWS

நடிகையை கத்தியால் குத்திய தயாரிப்பாளருக்கு 3 ஆண்டு சிறை
Published on 10/16/2024 00:41
Entertainment

மும்பை: பிரபல இந்தி நடிகை மால்வி மல்ஹோத்ரா. மும்பையை சேர்ந்த இவர், தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழில், ஆர்.கே ஜோடியாக மலையாள ‘ரிங்மாஸ்டர்’ படத்தின் ரீமேக்கில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் சமூக வலைதளம் மூலம் யோகேஷ் மஹிபால் சிங் என்பவர், தயாரிப்பாளர் என்று கூறி அறிமுகமானார். அவர் இசை ஆல்பம் தயாரிக்க இருப்பதாகவும் அதில் நடிக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

தொடர்ந்து மால்வியிடம் பேசி வந்த அவர், ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டுள்ளார். மால்வி மறுத்தார். இருந்தும் தொடர்ந்து அவரை பின் தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு அந்தேரி வெர்சோவா பகுதியில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, காரில் வழிமறித்த சிங், தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி மீண்டும் கேட்டார். மால்வி மறுத்ததால், அடிவயிறு மற்றும் கையில் கத்தியால் குத்திவிட்டு, சிங் தப்பி விட்டார்.

அக்கம் பக்கத்தினர் மீட்டு மால்வியை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார். இந்நிலையில் 4 வருடத்துக்குப் பிறகு, கடந்த சிலநாட்களுக்கு முன் மும்பை செஷன்ஸ் நீதிமன்றம்யோகேஷ் மஹிபால் சிங்குக்கு 3 வருட சிறைதண்டனையை விதித்துள்ளது.

இதுகுறித்து சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ள மால்வி, “அவர் என் முகத்தைக் கோரப்படுத்த முயன்றார். தடுக்க முயன்ற போது காயம் ஏற்பட்டது. இந்த தீர்ப்பு நிம்மதியை தருகிறது. இந்தச் சம்பவத்தால் கடுமையான மன வேதனைக்கு உள்ளானேன். உடல்ரீதியாக குணமடைந்தாலும் மனதளவில் அதைக் கடந்து செல்ல இன்னும் சில காலமாகும்” என்று தெரிவித்துள்ளார்.

Comments