Offline

LATEST NEWS

தனுஷ்- ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது குடும்ப நல நீதிமன்றம்
Published on 11/29/2024 02:11
Entertainment

இயக்குநர் கஸ்தூரிராஜாவின் இளைய மகன் நடிகர் தனுஷுக்கும், நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு லிங்கா , யாத்ரா என இரு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு ஐஸ்வர்யா திரைப்படங்களை இயக்கி வந்தார். மேலும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருவரும் கவனம் பெற்றனர். இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரியப்போவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர்.

இருவரும் பரஸ்பரத்துடன் பிரிவதாக அறிக்கை வெளியிட்டனர். இதனால் ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா மற்றும் தனுஷை சமாதானம் செய்யும் முயற்சிகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர்.

இதனை தொடர்ந்து, இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி முன்பு கடந்த 3-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கின் விசாரணை நவம்பர் 21-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

அப்போது இருவரும் ஆஜராகினர். அப்போது நீதிமன்றத்தின் கதவுகள் அடைக்கப்பட்டு இருவரிடமும் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிமன்ற விசாரணையில் தெரிவித்தனர். இதனை தொடர்ந்த இந்த வழக்கின் தீர்ப்பு நவம்பர் 27-ந்தேதி வழங்கப்படும் என குடும்ப நல நீதிமன்றம் அறிவித்தது.

அதன்படி, விவாகரத்து மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. தீர்ப்பில் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது.

Comments