உணவக உரிமையாளர்களுக்கு அந்நியத் தொழிலாளர்கள் உட்பட கூடுதல் ஆள்பலமாக 25 ஆயிரம் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர் என்று பிரிஸ்மா எனப்படும் மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் டத்தோ ஜவஹர் அலி தாய்ப் தெரிவித்துள்ளார்.
இதற்கு அரசாங்கம் அங்கீகாரம் அளிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. நீண்டகால அடிப்படையில் உணவகங்கள் சீராக இயங்குவதை இதன்மூலம் உறுதிப்படுத்தலாம் என்று அவர் சொன்னார். அந்நியத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்க்க அனுமதிக்கும்படி உள்துறை அமைச்சு, மனிதவள அமைச்சு, பொருளாதார விவகார அமைப்பு ஆகிய தரப்புகளுக்கு மனுச் செய்திருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.
அண்மையில் நடந்த சந்திப்பின்போது பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லியிடம் நான் நேரில் இந்த மனுவைக் கொடுத்தேன் என்றார் அவர். உணவகங்களில் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்க்கும் அனுமதி முடக்கப்பட்டிருக்கிறது. அந்நியத் தொழிலாளர்களைக் கொண்டு வர நிபந்தனைகளைத் தளர்த்தும்படியும் நாங்கள் கேட்டிருக்கின்றோம்.
அரசு விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் கடைப்பிடிப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அவர் சொன்னார். 25 ஆயிரம் தொழிலாளர்கள் தேவை என்பது முஸ்லிம் உணவகங்களுக்கு மட்டுமல்ல. மலேசிய சிங்கப்பூர் காப்பிக்கடை உரிமையாளர்களுக்கும் தொம் யாம் வியாபாரிகளுக்கும் இந்த ஆள்பலம் தேவைப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.