நாம் வாழும் இந்த பூமி மற்றும் இதர கோள்கள் சூரியனை ஒரு குறிப்பிட்ட சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வருகின்றன.
ஒரு காலத்தில் சூரியன் உள்பட 7 கிரகங்கள் மட்டுமே அறியப்பட்ட நிலையில், விஞ்ஞானிகளின் தொடர் ஆராய்ச்சி காரணமாக, சூரிய மண்டலத்திலேயே அதிக தொலைவில் அமைந்துள்ள சனி கிரகத்திற்கும் அப்பால், யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ உள்ளிட்ட கிரகங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. இன்றும் புளூட்டோ கிரகத்திற்கும் அப்பால் கிரகங்கள் உள்ளதா? அவற்றில் உயிரினங்கள் வாழ்கிறதா? என்ற விஞ்ஞானிகளின் சந்தேகம் மட்டும் இன்னும் தீர்ந்தபாடில்லை.
1930 ஆம் ஆண்டில், வானியலாளர்கள் பிளானட் ‘எக்ஸ்’ ஐத் தேடிக்கொண்டிருந்தபோது, அவர்கள் புளூட்டோவைக் கண்டு பிடித்தனர். அதன் ஒரு பகுதியாக தற்போது புளூட்டோ கிரகத்தையும் தாண்டி, சூரிய மண்டலத்தின் விளிம்பில் ஒரு பெரிய மற்றும் மர்மமான கிரகம் நமது பார்வையிலிருந்து விலகி பதுங்கியிருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அந்த கிரகத்திற்கு தற்போது ‘பிளானெட் நைன்’ (ஒன்பதாவது கிரகம்) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கடந்த வாரம், அமெரிக்கா நியூஜெர்சியின் மேம்பட்ட ஆய்வு நிறுவன விஞ்ஞானி சிஹோவோ செங் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி முடிவின்படி, இந்த புதிய கிரகம் தோராயமாக 700 கி.மீ. அகலம் கொண்டது. இது புளூட்டோவை விட மூன்று மடங்கு சிறியதாகவும் இருக்கிறது.
ஆனால் ஒரு கிரகம் என்று கருதப்படும் அளவுக்கு பெரியதாக உள்ளதாகவும், எனினும் இது ஒரு குள்ள கிரகமாகக் கருதப்படும் என்று சிஹாவோ செங் கூறினார்.
இந்த கிரகம் தற்போது பூமியிலிருந்து நெப்டியூனை விட மூன்று மடங்கு தொலைவில் உள்ளது. மேலும் அதன் மிக நீளமான சுற்றுப்பாதை பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரத்தை விட 1,600 மடங்கு அதிகமாக நகர்ந்து, சூரிய மண்டலத்தைச் சுற்றியுள்ள பனிக்கட்டி பாறைகளின் வளையத்திற்குள் செல்கிறது.