வாஷிங்டன்,அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். இதையடுத்து, பல்வேறு நாடுகள் மீது சரமாரியாக இறக்குமதி வரி விதிப்பை அறிவித்த டிரம்ப் வர்த்தக போருக்கு வழிவகுத்தார்.
இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரியை அறிவித்தார். இதனால், சர்வதேச அளவில் பெரும் தாக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு ஏற்கனவே 25 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்தது. அந்த வரி மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரும்பு மீதான இறக்குமதி வரி 50 சதவீதமாக உயர்த்தப்படுவதாக டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். பென்சில்வேனியாவில் உள்ள இரும்பு ஆலையை ஆய்வு செய்தப்பின் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், இந்த அறிவிப்பை வெளியிட்டார். இறக்குமதி வரி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இரும்பு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.