Offline
கம்போடியா எல்லை ஊடாக சுற்றுப்பயணிகள் தாய்லாந்துக்குள் உள்நுழையத் தடை விதிப்பு
By Administrator
Published on 06/08/2025 08:00
News

பேங்காக்:

கம்போடியாவுடனான தனது எல்லைப் பகுதிகளில் இரண்டை தாய்லாந்து, சனிக்கிழமை (ஜூன் 7) சுற்றுப்பயணிகளுக்குத் தற்காலிகமாக மூடியதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருநாட்டு ராணுவத்துக்கு இடையே அண்மையில் ஏற்பட்ட மோதலில் கம்போடிய ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். அதிலிருந்து இருநாட்டு உறவு மோசமடைந்துள்ளது.

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே 2008ஆம் ஆண்டு சண்டை தொடங்கியது. அதிலிருந்து அவ்வப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படுவதுண்டு. அந்த மோதல்களில் இதுவரை குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், கடந்த மே மாதம் 28ஆம் தேதி எமரல்ட் ட்ரையேங்கல் என்றழைக்கப்படும் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதலில் கம்போடிய வீரர் கொல்லப்பட்டார். எமரல்ட் ட்ரையேங்கல், கம்போடியா, தாய்லாந்து, லாவோஸ் ஆகிய நாடுகள் சந்திக்கும் எல்லைப் பகுதியாகும்.

அதற்கு மறுநாள் தாய்லாந்து, கம்போடிய ராணுவங்கள் பதற்றத்தைத் தணிக்க ஒப்புக்கொண்டன. எனினும், அப்பகுதியில் தங்கள் படைகளைத் தொடர்ந்து நிறுத்தப்போவதாக கம்போடியா பிறகு தெரிவித்தது. படைகளை மீட்டுக்கொள்ளுமாறு தாய்லாந்து வேண்டுகோள் விடுத்தபோதும் கம்போடியா அவ்வாறு கூறியது.

தாய்லாந்தின் கிழக்குப் பகுதியில் உள்ள சந்தாபுரி மாநிலத்தில் இருக்கும் இரண்டு நிரந்தரக் குடிநுழைவுச் சாவடிகளைத் தற்காலிகமாக முடியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வர்த்தகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் இருநாட்டு சுற்றுப்பயணிகள் எல்லைகளைக் கடக்கத்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

தனது படைகளை மீட்டுக்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை கம்போடியா மறுத்தது மிகுந்த வருத்தம் தரும் ஒன்று என தாய்லாந்துத் துணைப் பிரதமரும் தற்காப்பு அமைச்சருமான ஃபும்தாம் வெச்சயாச்சாய் சனிக்கிழமை அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த எல்லை விவகாரம் குறித்து அனைத்துலக நீதிமன்றத்திடம் புகார் கொடுக்கப்போவதாக கம்போடியப் பிரதமர் ஹுன் மானெட் கடந்த திங்கட்கிழமை (ஜூன் 2) கூறியிருந்தார்.

பல ஆண்டுகளாக வன்முறை தொடர்ந்ததையடுத்து சர்ச்சைக்குரிய எல்வைப் பகுதி கம்போடியாவுக்குச் சொந்தமானது என அனைத்துலக நீதிமன்றம் 2013ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. ஆனால், அனைத்துலக நீதிமன்றத்தின் முடிவைத் தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தாய்லாந்து கூறி வருகிறது.

இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண கூட்டு எல்லைக் குழு ஒன்று அடுத்த வாரம் சந்திக்கும் என்று தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments