புதுடெல்லி:
டெல்லி விமான நிலையத்தில் ஓடுபாதை மேம்பாட்டுப் பணிக்காக 114 விமானச் சேவைகள் மூன்று மாத காலத்திற்கு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையம் (IGIA) நாட்டில் எல்லா விமான நிலையங்களைக் காட்டிலும் பெரியது. மேலும், 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியது அது.
அந்த விமான நிலையத்தில் தினமும் 1,450 விமானச் சேவைகள் நிகழ்கின்றன.
அதற்காக நான்கு ஓடுபாதைகள் செயல்பாட்டில் உள்ளன.
அவற்றில் RW 10/28 என்னும் ஓடுபாதையில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் ஜூன் 15ஆம் தேதி முதல் அந்தப் பாதை மூடப்பட இருப்பதாக அந்த விமான நிலையத்தை நிர்வகிக்கும் ‘டயல்’ (DIAL) என்னும் அரசு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விதே குமார் ஜெய்ப்பூராரி தெரிவித்து உள்ளார்.
மூன்று மாத காலத்திற்கு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற இருப்பதால் அந்த ஓடுபாதையைப் பயன்படுத்தும் 200 விமானச் சேவைகள் பாதிக்கப்படும்.
அவற்றில் 114 விமானச் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகவும் 88 விமானச் சேவைகள் மாற்றுவழியில் திருப்பிவிடப்படுவதாகவும் அவர் சொன்னார்.
ரத்து செய்யப்படும் விமானச் சேவைகளின் விகிதம் அந்த விமான நிலையத்தின் அன்றாட விமானச் சேவைகளில் 7.5 விழுக்காடு ஆகும்.
ஓடுபாதையில் தற்போது சில சிக்கல்கள் ஏற்படுவதாகவும் குறிப்பாக பனிமூட்ட காலத்தின்போது விமானங்களுக்கு சிரமம் ஏற்படுவதாகவும் அதனால் அதனை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.