சென்னை,கமலகுமாரி, ராஜ்குமார் தயாரிப்பில் பிக்கய் அருண் இயக்கத்தில் ‘டெவிலன்’ என்ற படம் தயாரானது. இதில் ராஜ்குமார் கதாநாயகனாகவும், கார்த்திகா, இந்திரா ஆகியோர் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். மேலும் பெடரிக், ஆனந்தி விஜயகுமார், டோர்த்தி, கிருதேவ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இந்த படம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. அதாவது, இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் 29-ந் தேதி நடந்து முடிந்தது. 24 மணி நேரத்தில் படப்பிடிப்பு முடிந்து, அடுத்த 24 மணி நேரத்தில் எடிட்டிங், டப்பிங், கலரிங், கிராபிக்ஸ் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டன.
ஹேமலதா தலைமையிலான குழு படத்தை நேரடியாக கண்காணித்து, ஒவ்வொரு செயல்பாட்டையும் ஆய்வு செய்தன. மேலும் படத்தின் இதர தொழில்நுட்ப பணிகளையும் விரிவான ஆய்வு பணிகள் நடத்தின. ஆய்வுகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில், நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் ‘டெவிலன்’ படம் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழும் படக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
இதுகுறித்து இயக்குனர் பிக்கய் அருண் கூறுகையில், ”3 கேமராக்கள் மூலமாக படப்பிடிப்பை நடத்தினோம். ஒரு வருட முயற்சியை 2 நாளில் வழங்கி உலக சாதனை படைத்துள்ளோம். உறுதுணையாக இருந்த அத்தனை பேருக்கும் நன்றி”, என்றார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.