குடிநுழைவு துறை புதிய நடைமுறை
பாலிங்:
அக்டோபர் முதல், நாட்டில் விசாக்காலம் முடிந்த பின் 90 நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கு குடிநுழைவு துறை அபராதங்களை (Compound Notices) வழங்கும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் அறிவித்துள்ளார்.
சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் நோக்கில், விசாரணை தொடங்கி வழக்குகளை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இனி இருக்காது என்றும் அவர் விளக்கினார்.
“நாங்கள் அபராதம் விதிக்கும்போது, வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்படாது என்பது பொருள். முன்னர், கூடுதல் அபராத அறிவிப்புகள் அனைத்திற்கும் விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டு, நீதிமன்ற நடைமுறைகளுக்கு உட்படுத்த வேண்டியிருந்தது. இனி, குறிப்பாக 90 நாட்களுக்கு உட்பட்ட தங்குதவைகளுக்கு நேரடியாக அபராதம் வழங்கப்படும்,” என்று அவர் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5) செக்கோலா கெபாங்சான் ராம்போங் புலையில் நடைபெற்ற “Kampung Angkat and Sekolah Angkat Madani JIM” திட்டத்தைத் தொடங்கியபோது தெரிவித்தார்.
அபராத விவரங்கள்
1–30 நாட்கள் வரை தங்கியிருப்போர்: ஒரு நாளுக்கு RM30 (அதிகபட்சம் RM900) அபராதம்
31–60 நாட்கள் வரை தங்கியிருப்போர்: RM1,000 அபராதம்
61–90 நாட்கள் வரை தங்கியிருப்போர்: RM2,000 அபராதம்
ஆனால் 90 நாட்களுக்கும் அதிகமாக, உதாரணமாக பல ஆண்டுகள் தங்கியிருப்போர் மீது விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டு வழக்கு தொடரப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த புதிய நடைமுறை சட்ட நடவடிக்கைகளை முடிக்க வேண்டிய காலத்தை 14 நாட்களில் இருந்து ஒரே நாளாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சட்டவிரோத குடியேறிகளை விரைவாக நாடு கடத்தவும், குடிநுழைவு தடுப்பு முகாம்களில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கவும் உதவும் என்று அமைச்சர் கூறினார்.