கோலாலம்பூர்:
டயர் கடத்தல் மற்றும் ஆவண மோசடி தொடர்பாக நடத்தப்பட்ட விரிவான விசாரணையின் ஒரு பகுதியாக, மொத்தம் RM70 மில்லியன் மதிப்புள்ள 41 வங்கிக் கணக்குகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) முடக்கியுள்ளது.
முடக்கப்பட்ட கணக்குகளில் 16 நிறுவனக் கணக்குகளும், 25 தனிப்பட்ட வங்கிக் கணக்குகளும் அடங்குகின்றன. மேலும், சுமார் RM13 மில்லியன் மதிப்புள்ள நான்கு அசையா சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று அது தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை, MACC இன் சிறப்பு செயல்பாட்டுப் பிரிவு (Special Operations Division) தலைமையில், ராயல் மலேசிய சுங்கத் துறை, உள்நாட்டு வருமான வரித்துறை (LHDN) மற்றும் பேங்க் நெகாரா மலேசியா ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்டது.
“Op Grip” என்ற குறியீட்டுப் பெயரில் நடந்த இந்த நடவடிக்கை, சட்டவிரோத டயர் கடத்தல் வலையமைப்புகளில் ஈடுபட்ட நிறுவனங்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டது,” என MACC தெரிவித்துள்ளது.
இதுவரை நடைபெற்ற விசாரணையில், கடத்தல் வலையமைப்பின் ஒரு பகுதியாக இரண்டு நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அந்த நிறுவனங்கள் பயன்படுத்திய மோசடி முறைகளில், அங்கீகரிக்கப்படாத வர்த்தகர்களிடமிருந்து டயர்களை வாங்குதல், ஸ்டிக்கர் மற்றும் போலி பார்கோடு போன்றவை அடங்குகின்றன.
ஆரம்பக் கண்டுபிடிப்புகள் படி, கடத்தப்பட்ட டயர்கள் புதியவையாக இருந்தாலும், அவற்றில் பார்கோடு சேதப்படுத்தல் மற்றும் தவறான லேபிள் ஒட்டுதல் போன்றவற்றில் முறைகேடுகள் செய்யப்பட்டிருந்தன.
விசாரணை இன்னும் நடைபெற்று வருவதால், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று, MACC துணைத் தலைமை ஆணையர் (தடுப்பு) டத்தோ அஸ்மி கமருசாமான் கூறினார்.