வயநாடு, கேரளம் மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அடுத்த கல்லாடி பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இந்த பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
நிலச்சரிவு
இதேபோல நேற்று முன்தினம் கல்லாடி மீனாட்சி பாலம் பகுதியில் சுரங்கப்பாதை நுழைவுவாயில் அருகே 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அந்த சமயத்தில் அப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால் சுரங்கப்பாதை நுழைவுவாயில் அருகே திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மலைப்பகுதியில் இருந்து நீரோடு மண் கீழ் நோக்கி அடித்து வரப்பட்டது. அதோடு அங்குள்ள சாலை, பாலத்தை மண் மூடியது.
உயிரிழப்பு
அங்கு சாலையில் நின்ற டேங்கர் லாரியை நிலச்சரிவு அடித்து சென்றது. மேலும் அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் உயிரை கையில் பிடித்தபடி ஓட்டம் பிடித்தனர். ஆனால், சுரங்கப்பாதை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் சிலர் நிலச்சரிவில் சிக்கினர். தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், வயநாடு போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்து 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மேப்பாடியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நிலச்சரிவில் சிக்கிய 5 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் 4 பிரிவுகளாக மீட்பு குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோர், மண்ணுக்குள் புதைந்தவர்களை மோப்ப நாய்கள் உதவியுடன் தேடி வருகின்றனர்.