கோலாலம்பூர்
மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) கடந்த நவம்பர் மாதம் முதல் வழங்கி வரும் 50 சதவீதக் கட்டணச் சலுகையின் மூலம், நேற்று வரை 93.51 மில்லியன் ரிங்கிட் (RM93.51 million) அபராதத் தொகையை வசூலித்துள்ளதாக அதன் அமலாக்கப் பிரிவு இயக்குநர் டத்தோ முகமது கிஃப்லி மா ஹசான் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு கோலாலம்பூரில் நடைபெற்ற அதிரடிச் சோதனை நடவடிக்கைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த வசூல் குறித்த முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்:
இதன் மூலம் வசூலான மொத்த தொகை RM 93.51 மில்லியன் என்றும்,
மொத்தம் 7,02,606 சம்மன்களுக்கு அபராதம் செலுத்தப்பட்டுள்ளது என்றும், இதில் 4,04,535 சம்மன்கள் தானியங்கி விழிப்புணர்வு பாதுகாப்பு அமைப்பின் (AwAS) கீழ் அதிவேகமாகச் சென்றதற்காக வழங்கப்பட்டவை என்றும் அவர் கூறினார்.
தற்போது வசூலிக்கப்பட்டுள்ள தொகை மிகக் குறைவானதே. இன்னும் சுமார் 1.42 பில்லியன் ரிங்கிட் (RM1.42 billion) மதிப்பிலான சம்மன்கள் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இந்த நிலையில் சாலைப் பயனர்கள் தங்களின் நிலுவையிலுள்ள சம்மன்களைப் பாதி விலையில் செலுத்துவதற்கு நவம்பர் 1 முதல் டிசம்பர் 30 வரை இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்தத் தள்ளுபடித் திட்டம் முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வாகன ஓட்டிகள் உடனடியாகத் தங்களின் நிலுவைச் சம்மன்களைச் செலுத்திப் பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்,” என்று டத்தோ முகமது கிஃப்லி வலியுறுத்தினார்.
வரும் 2026 ஜனவரி 1 முதல், அபராதம் செலுத்துவதில் தாமதம் செய்பவர்களுக்குத் தள்ளுபடி வழங்கப்பட மாட்டாது என்றும், புதிய கட்டண முறை அமல்படுத்தப்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.