Offline
Menu
சோதனைச்சாவடியில் 3.2 கிலோ கஞ்சா, 1.7 கிலோ ‘ஐஸ்’ போதைப்பொருள் பறிமுதல்
By Administrator
Published on 12/31/2025 15:01
News

கோலாலம்பூர்:

உட்லண்ட்ஸ் நிலச்சோதனைச்சாவடி வழியாகச் சிங்கப்பூருக்குள் போதைப்பொருட்களைக் கடத்த முயன்ற 39 வயது மலேசிய ஆடவரைச் சிங்கப்பூர் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி மாலை, உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் குடிநுழைவு மற்றும் சோதனைச்சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகள் மேற்கொண்ட வழக்கமான சோதனையின் போது இந்த ஆடவர் சிக்கினார்.

அந்த ஆடவரிடம் ஏழு பொட்டலங்கள் இருந்தன. அவற்றைச் சோதனை செய்ததில், 3,272 கிராம் (சுமார் 3.2 கிலோ) கஞ்சா, 1,709 கிராம் (சுமார் 1.7 கிலோ) ‘ஐஸ்’ (Methamphetamine) ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் சந்தை மதிப்பு 237,000 சிங்கப்பூர் வெள்ளிக்கும் (சுமார் 7.7 லட்சம் மலேசிய ரிங்கிட்) அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அளவு போதைப்பொருட்கள் சுமார் 1,440 போதைப்பித்தர்கள் ஒரு வாரம் பயன்படுத்துவதற்குப் போதுமானது என்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (CNB) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் சட்டப்படி, 500 கிராமுக்கு அதிகமான கஞ்சா அல்லது 250 கிராமுக்கு அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளைக் கடத்துபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

தற்போது அந்த ஆடவர் மீது போதைப்பொருள் கடத்தல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் நுழையும் பயணிகளை நவீன தரவு பகுப்பாய்வு (Data analytics) முறையில் கண்காணித்ததன் விளைவாக இந்த நபர் பிடிபட்டுள்ளார்.

Comments