புளோரிடாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு விரைவுப்படகு (Speedboat) கியூபா எல்லைக்குள் நுழைந்தபோது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர். கியூபாவின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள ஃபால்கோன்ஸ் கே (Falcones Cay) அருகே இந்தப் படகு வந்தபோது, கியூபா எல்லைப் பாதுகாப்புப் படையினர் அடையாளச் சான்றுகளைக் கேட்டு அணுகியுள்ளனர். அப்போது படகில் இருந்தவர்கள் திடீரெனத் தாக்குதல் நடத்தியதால் இந்த மோதல் வெடித்ததாக கியூபா உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்டவர்களில் ஒருவர் மிஷெல் ஒர்டேகா காசநோவா (Michel Ortega Casanova) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தப் படகில் வந்தவர்கள் கியூபா அரசால் தேடப்பட்டு வந்த 'பயங்கரவாதிகள்' என்றும், அவர்கள் அமெரிக்காவிலிருந்து ராணுவ உடை மற்றும் நவீன ரக துப்பாக்கிகள், வெடிகுண்டுகளுடன் கியூபாவிற்குள் ஊடுருவ முயன்றதாகவும் கியூபா குற்றம் சாட்டியுள்ளது. இந்தத் தாக்குதலில் கியூபா எல்லைப் பாதுகாப்புப் படைத் தளபதியும் காயமடைந்த நிலையில், காயமடைந்த மற்றவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கருத்துத் தெரிவிக்கையில், இது அமெரிக்க அரசின் நடவடிக்கை அல்ல என்றும், இதில் அரசுப் பணியாளர்கள் எவரும் ஈடுபடவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார். இருப்பினும், புளோரிடா மாகாண அதிகாரிகள் கியூபாவின் கூற்றை நம்பத் தயாராக இல்லை என்றும், இது குறித்து ஒரு முழுமையான மற்றும் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவிற்கும் கியூபாவிற்கும் இடையே ஏற்கனவே நிலவும் பதற்றமான சூழலில், இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.