ஆப்பிள் சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள ‘DarkSword’ எனப்படும் ஆபத்தான பாதுகாப்பு குறைபாடுகளைத் தொடர்ந்து, ஐபோன் பயனர்கள் தங்களது சாதனங்களை உடனடியாகப் புதிய பதிப்பிற்கு (iOS Update) மாற்ற வேண்டும் என்று மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) வலியுறுத்தியுள்ளது.
இந்த பாதுகாப்பு ஓட்டைகள் வழியாக ஹேக்கர்கள் உங்கள் சாதனத்தைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வாய்ப்புள்ளதாக MCMC எச்சரித்துள்ளது.
உங்கள் ஐபோனை அப்டேட் செய்யாவிட்டால் பின்வரும் அபாயங்கள் ஏற்படலாம்: உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் தரவுகளை மற்றவர்கள் திருட வாய்ப்பு, உளவு பார்க்கும் மென்பொருட்கள் அல்லது தீங்கிழைக்கும் மென்பொருட்கள் (Malware) உங்கள் போனில் தானாகவே நிறுவப்படலாம், குறுஞ்செய்திகள், கோப்புகள் (Files) மற்றும் ரகசியத் தகவல்கள் திருடப்படலாம் மற்றும் உங்கள் சாதனம் மற்றவர்களால் கண்காணிக்கப்பட அல்லது ஒட்டுக் கேட்கப்பட வாய்ப்புள்ளது.
எனவே இவற்றை தடுக்க MCMC வழங்கியுள்ள பாதுகாப்பு ஆலோசனைகளாக தானியங்கி அப்டேட் (Automatic Updates): உங்கள் போனில் மென்பொருள் தானாகவே அப்டேட் ஆகும் வசதியைச் செயல்படுத்தவும், அதிகாரப்பூர்வ தளம்: செயலிகளை (Apps) எப்போதும் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ App Store-லிருந்து மட்டுமே தரவிறக்கம் செய்யவும். சந்தேகத்திற்குரிய இணையதளங்கள்: தேவையற்ற அல்லது சந்தேகத்திற்குரிய இணையதளங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்.
மென்பொருளை அப்டேட் செய்த பிறகு, உங்கள் சாதனத்தை ஒருமுறை ரீஸ்டார்ட் (Restart) செய்யுமாறும் அது தெரிவித்துள்ளது.
உங்கள் போனின் செயல்பாட்டில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால் விழிப்புடன் இருக்குமாறும், எப்போதும் அதிகாரப்பூர்வ ஆதாரங்களிலிருந்து வரும் தகவல்களை மட்டுமே நம்புமாறும், பாதுகாப்பான டிஜிட்டல் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்குமாறும் MCMC கேட்டுக்கொண்டுள்ளது.