மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவரைப் பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக, எச்.ஐ.வி (HIV) மற்றும் இரத்தப் புற்றுநோயால் (Leukaemia) பாதிக்கப்பட்டுள்ள 39 வயது பாதுகாப்பு அதிகாரிக்கு ஜோகூர் பாரு அமர்வு நீதிமன்றம் இன்று 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட ஆர். சிவநேசன் (R. Sivanesan) 29 வயதுடைய மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவரை இவர் வன்புணர்வு செய்துள்ளார். அந்தப் பெண்ணிற்கு செவித்திறன், பேச்சு குறைபாடு மற்றும் கற்றல் குறைபாடுகள் இருப்பது சிவநேசனுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது.
கடந்த ஜனவரி 30-ஆம் தேதி இரவு 11:50 மணியளவில், ஸ்கூடாய் (Skudai), தாமான் ஜெயா மாஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நீதிபதி மடிஹா சைனோல் (Madihah Zainol) முன்னிலையில் சிவநேசன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 5 பிரம்படிகள் விதிக்கப்பட்டன.
சிறைக்காலத்தின் போது அவர் மறுவாழ்வு ஆலோசனைகளைப் பெற வேண்டும் என்றும், விடுதலையான பிறகு ஒரு ஆண்டு காலம் போலீஸ் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிவநேசன் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், அவர் எச்.ஐ.வி மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், அவருக்கு இதற்கு முன் எவ்வித குற்றப் பின்னணியும் இல்லை எனவும் கூறினார்.
ஆனால் அரசுத் தரப்பு வழக்கறிஞர் நோர் பாடிலா ஜொஹானுடின், குற்றம் சாட்டப்பட்டவர் மாற்றுத்திறனாளிப் பெண்ணின் பலவீனத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்று சுட்டிக்காட்டினார். மேலும், அவருக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பதால், பாதிக்கப்பட்ட பெண்ணிற்குப் பால்வினை நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி கடுமையான தண்டனை வழங்கக் கோரினார்.
இந்த வழக்கு தண்டனைச் சட்டம் பிரிவு 376(2)(k)-இன் கீழ் விசாரிக்கப்பட்டது. இது போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்சமாக 30 ஆண்டுகள் வரை சிறை மற்றும் கட்டாயப் பிரம்படி வழங்கச் சட்டத்தில் இடமுள்ளது.