மலேசியாவில் போதைப்பொருள் தொடர்பான குற்றச் செயல்கள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதாகத் தேசிய போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் (NCID) இயக்குநர் ஹுசைன் ஒமர் கான் கவலை தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் புள்ளிவிவரங்களை வெளியிட்டார்.
அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள்
2023 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் போதைப்பொருள் தொடர்பான 242,075 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. இது தொடர்பாக மொத்தம் 306,230 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2023 இல் 73,345 வழக்குகளும் (94,799 கைதுகள்), 2024 ஆம் ஆண்டு 81,090 வழக்குகளும் (102,201 கைதுகள்) மற்றும் 2025 இல் 87,645 வழக்குகள் (109,230 கைதுகள்) ஆகியன பதிவாகியுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மெத்தம்ஃபெட்டமைன் (Methamphetamine), கெட்டமின் (Ketamine), எம்டிஎம்ஏ (MDMA) மற்றும் கஞ்சா உள்ளிட்ட பெருமளவிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, புதிய போதைப்பொருள் தடுப்பு உத்தி (2026-2030)
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான தேசிய போதைப்பொருள் கொள்கையில் பெரிய மாற்றம் செய்யப்பட உள்ளதாக ஹுசைன் ஒமர் கான் தெரிவித்தார்.
இனி காவல்துறை வெறும் நடவடிக்கை எடுப்பதோடு நில்லாமல், கல்வி, சமூகம் மற்றும் சமய நிறுவனங்கள் வாயிலாக அடிமட்ட அளவில் போதைப்பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் மற்றும் முக்கிய விநியோகஸ்தர்களுக்கு எதிரான சோதனைகள் தீவிரப்படுத்தப்படும்.
மேலும் “புதிதாக ஒருவர் போதைக்கு அடிமையாவதைத் தடுப்பதே எங்களின் முதன்மை வெற்றி. தேவையைக் குறைப்பதன் மூலமே விநியோகச் சங்கிலியை உடைக்க முடியும்,” என அவர் விளக்கினார்.