ஜோகூர்பாரு:
உலகிலேயே மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே வாழ்ந்து வரும், அழிந்து வரும் அரிய வகை குரங்கினமான ‘ராபிள்ஸ் லங்குர்’ (Raffles’ Banded Langur) குரங்குகள் ஜோகூர் மாநிலக் காடுகளில் புதிய கூட்டமாகப் பரவி வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது. இது விலங்கியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாண்டு மே மாதம், துன் ஹுசேன் ஓன் மலேசியப் பல்கலைக்கழகமும் (UTHM) ஜோகூர் மாநில வனத்துறையும் இணைந்து லெங்கோர்-மெர்சிங் (Lenggor-Mersing) காட்டுப்பகுதியில் விரிவான கூட்டு கள ஆய்வுகளை மேற்கொண்டன.
இந்த ஆய்வின் போது, இதற்கு முன்பு மனிதர்களால் அடையாளம் காணப்படாத வகையில், புதிதாக சுமார் 40 முதல் 50 குரங்குகளைக் கொண்ட ‘ராபிள்ஸ் லங்குர்’ கூட்டமொன்று அக்காட்டுப்பகுதியில் வாழ்வது உறுதி செய்யப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழகத்தின் அறிவியல், தொழில்நுட்ப மற்றும் மனித மேம்பாட்டுத் துறைத் தலைவர் பேராசிரியர் முகம்மது அப்துல் லத்தீஃப் அபு பாக்கார் தெரிவித்தார்.
ஜோகூர் வனப்பகுதியின் பரப்பளவையும் அடர்த்தியையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், இன்னும் பல புதிய குரங்குக் கூட்டங்கள் இக்காடுகளுக்குள் வாழ அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். தற்போது தொடங்கியுள்ள இந்த முழுமையான ஆய்வுகள் நிறைவடையும் போது, ஜோகூர் மாநிலத்தில் மட்டுமே சுமார் 600 முதல் 700 ‘ராபிள்ஸ் லங்குர்’ குரங்குகள் வரை வாழக்கூடும் எனத் தங்களின் ஆய்வுக்குழு எதிர்பார்ப்பதாக அவர் மேலும் கூறினார்.
அனைத்துலக இயற்கைப் பாதுகாப்பு அமைப்பால் (IUCN) கடந்த 2022-ஆம் ஆண்டில், உலகிலேயே மிக அரிய மற்றும் ஆபத்துக்குள்ளான (Critically Endangered) விலங்கினமாக இந்த ‘ராபிள்ஸ் லங்குர்’ குரங்குகள் பட்டியலிடப்பட்டன. அந்தக் காலகட்ட கணக்கெடுப்பின்படி, மலேசியாவில் ஒட்டுமொத்தமாக 300 குரங்குகளும், அண்டை நாடான சிங்கப்பூரில் 68 குரங்குகளும் மட்டுமே எஞ்சியிருப்பதாகக் கணிக்கப்பட்டிருந்தது.
இத்தகைய இக்கட்டான சூழலில், ஜோகூர் காடுகளில் தற்போது கணிக்கப்பட்டுள்ள புதிய எண்ணிக்கை, அம்மாநிலத்தைத் தாண்டி மலேசியாவின் மற்ற காடுகளிலும் இக்குரங்கினங்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான நல்வாய்ப்புகளையும் சாத்தியக்கூறுகளையும் உறுதிப்படுத்தியுள்ளது.