ஸ்கூடாய்:
ஜோகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹபீஸ் காஸி நேற்று துன் அமினா தமிழ்ப்பள்ளிக்கு முதல்முறையாக அதிகாரப்பூர்வ வருகை தந்து ஆசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடியதுடன், பள்ளியின் பல்வேறு தேவைகளுக்கும் உடனடி தீர்வுகளை அறிவித்து மகிழ்ச்சி அளித்தார்.
மலேசியாவில் அதிக மாணவர்கள் கல்வி பயிலும் தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றாக விளங்கும் இப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர், ஜோகூரை 2030ஆம் ஆண்டுக்குள் முன்னேறிய மாநிலமாக மாற்றும் இலக்கை மாநில அரசு உறுதியாக முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
“ஜோகூரின் பொருளாதார வளர்ச்சி சரியான பாதையில் செல்கிறது. பல பில்லியன் ரிங்கிட் முதலீடுகள் மாநிலத்திற்குள் வந்து கொண்டிருக்கின்றன. மாநில வருமானம் ஆண்டுதோறும் சுமார் 30 விழுக்காடு உயர்ந்து வருகிறது. அரசுடன் தொடர்புடைய நிறுவனங்களும், உள்ளூராட்சி மன்றங்களும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. மாநிலத்தின் வருமானம் அதிகரிக்கும் போது அதன் பயன் மக்களிடமே திரும்பிச் செல்ல வேண்டும் என்பது அரசின் பொறுப்பு,” என்று அவர் கூறினார்.
அதேவேளை, “இந்தியர், மலாய், சீனர், பூர்வகுடியினர் என நாம் அனைவரும் ‘பங்சா ஜோகூர்’ என்ற ஒரே அடையாளத்தின் கீழ் பெருமையுடன் வாழ்கிறோம். ஒற்றுமையாக இருக்கும் போது தான் ஜோகூர் மிகவும் வலிமையான மாநிலமாகத் திகழ்கிறது. பிளவுபட்ட உலகில் நாம் குடும்பமாக ஒன்றுபட்டு இருக்க வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்திற்காகவே மாநில அரசு நேற்று பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது,” என்றார்.
தற்போது 12 வயதாக இருக்கும் மாணவர்கள் இன்னும் பத்து ஆண்டுகளில் கல்வியை முடித்து வேலைவாய்ப்பிற்குள் நுழையும் போது, ஜோகூரிலேயே உயர்ந்த தரமான வேலைவாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக மாநில அரசு கடுமையாக உழைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.