கோலா திரெங்கானு:
சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனையின் (Sultanah Nur Zahirah Hospital) அவசர சிகிச்சைப் பிரிவின் கண்ணாடி கதவுகளை மோட்டார் சைக்கிள் கொண்டு மோதி உடைத்த 28 வயது வாலிபருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் அவர் ‘மெத்தம்பேட்டமின்’ (Methamphetamine) என்ற போதைப்பொருள் பாவித்திருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 3 மணியளவில், அந்த வாலிபர் மருத்துவமனையின் ‘பசுமை மண்டல’ (Green Zone) பகுதிக்குள் நுழைந்தபோது கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த கண்ணாடி கதவுகளின் மீது மோதியதாக மாவட்டப் போலீஸ் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் அஸ்லி முகமது நூர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் அந்த நபரின் இரு கைகளிலும் லேசான காயங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு அந்த அவசர சிகிச்சைப் பிரிவிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.
“தற்போது, ஏற்பட்டுள்ள காயங்கள் காரணமாக அவர் மருத்துவமனை வார்டில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்,” என்று அஸ்லி கூறினார்.
வாகனத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கத் தவறியதற்காக, சாலைப் போக்குவரத்து விதிகள் 10-இன் கீழ் இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இக்குற்றத்திற்கு அதிகபட்சமாக 300 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.