மலேசியாவில் நேற்று அமலுக்கு வந்த வங்கிகளுக்கு இடையிலான ஏடிஎம் (ATM) பணப்பரிவர்த்தனைக்கான ஒரு ரிங்கிட் கட்டண விலக்கு, வங்கிகளால் நேரடியாக இயக்கப்படும் ஏடிஎம் இயந்திரங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி பாட்சில் தெளிவுபடுத்தியுள்ளார்.
புத்ராஜெயாவில் நடைபெற்ற வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், நாட்டின் 84 விழுக்காடு அல்லது சுமார் 16,000 வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் இந்தக் கட்டணம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
எஞ்சிய 16 விழுக்காடு ஏடிஎம்கள் தனியார் நிறுவனங்களால் தனி வணிக ஒப்பந்தத்தின் கீழ் இயக்கப்படுவதால், அவற்றில் இந்தக் கட்டண விலக்கு பொருந்தாது என்றும், பொதுமக்கள் வங்கியின் சின்னம் (Logo) இல்லாத ஏடிஎம் இயந்திரங்களை அடையாளம் கண்டு எச்சரிக்கையுடன் செயல்படுமாறும் அவர் அறிவுறுத்தினார்.
ஒருவேளை வங்கியின் சின்னம் கொண்ட ஏடிஎம்களில் இந்த ஒரு ரிங்கிட் கட்டணம் வசூலிக்கப்பட்டால், அதுகுறித்து உடனடியாக மலேசிய மத்திய வங்கியான பேங்க் நெகாராவிடம் (BNM) புகார் அளிக்கலாம் என்றும் அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் மேலும் தெரிவித்துள்ளார்.