மலேசியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 300 கிராமுக்கும் அதிகமான கஞ்சாவைக் கடத்தியதாகவும், கஞ்சாச் செடிகளை வளர்த்ததாகவும் தொடரப்பட்ட வழக்குகளிலிருந்து சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவரும், அவரது இரு மகன்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அனில் செப்னானி (63), நேத்தன் (38), சிதாந்த் (35) ஆகிய மூவரையும் ஷா ஆலம் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) குற்றமற்றவர்கள் என அறிவித்து விடுதலை செய்தது. இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு போதிய ஆதாரங்களுடன் மெய்ப்பிக்கத் தவறிவிட்டதாக நீதிபதி அஸ்லாம் ஸைனுதீன் தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
அச்சுத் தொழில் செய்து வந்த இம்மூவரும், கடந்த 2021 மார்ச் 25 அன்று சிலாங்கூர், செமெனியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வைத்து மலேசியக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். அதுமுதல் அவர்கள் சிறையிலேயே அடைக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் தங்கியிருந்த வீட்டின் மூன்றாவது தளத்தில் சோதனை நடத்தியபோது, 25 கண்ணாடிப் புட்டிகளில் இருந்த கஞ்சா, 8 கஞ்சாச் செடிகள் மற்றும் வெப்பநிலைக் கட்டுப்பாட்டுக் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மரண தண்டனைக்குரிய இந்த வழக்கில், தற்காப்பு வழக்கறிஞர்கள் கீதன் ராம் வின்சென்ட் மற்றும் லவினா ராஜா ஆகியோர் நீதிமன்றத்தில் முக்கிய வாதங்களை முன்வைத்தனர். குறிப்பிட்ட அந்த வீடு ‘சான் பீட்’ என்பவரால் வாடகைக்கு எடுக்கப்பட்டது என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் அந்தச் சொத்திற்கும் நேரடித் தொடர்பில்லை என்றும் அவர்கள் நிரூபித்தனர். மேலும், அவ்வீட்டிற்குள் மூன்றாவது நபர் யாராவது வந்து செல்ல வாய்ப்பிருந்ததையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட போதிலும், மூவராலும் உடனடியாகச் சிங்கப்பூர் திரும்ப முடியவில்லை. முறையான ஆவணச் சரிபார்ப்புகளுக்காக மலேசியக் குடிநுழைவுத் துறையினரால் அவர்கள் மீண்டும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பிற்கு எதிராக மலேசிய அரசுத் தரப்பு விரைவில் மேல்முறையீடு செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.