மலேசியாவில் மின்-இன்வாய்ஸ் (e-Invoice) முறை படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வரும் வேளையில், நாட்டின் சிறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்களுக்குப் பெரும் நிவாரணம் அளிக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்றை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிட்டுள்ளார். இதன்படி, வர்த்தகர்கள் தங்களின் மின்-இன்வாய்ஸ்களில் தானாக முன்வந்து செய்யும் திருத்தங்களுக்கு (Voluntary Corrections) 2027 டிசம்பர் 31 வரை எந்தவித அபராதமும் விதிக்கப்பட மாட்டாது என்று அவர் உறுதி அளித்துள்ளார்.
புதிய டிஜிட்டல் வரி முறைக்கு வர்த்தக நிறுவனங்கள் தங்களை முழுமையாக மாற்றிக் கொள்ள கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதை உணர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அதிரடி சலுகை நடவடிக்கை, மலேசியாவின் வர்த்தகச் சூழலை எளிதாக்குவதோடு, நாட்டின் பொருளாதார மீட்சிக்கு பெரும் துணையாக இருக்கும் என வர்த்தக அமைப்புகள் பாராட்டு தெரிவித்துள்ளன.