வாஷிங்டன், அணுசக்தி ஒப்பந்தம் மூலம் சவுதி அரேபியாவுக்கு யுரேனியம் செறிவூட்டலுக்கான அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்காக சவுதி அரேபியாவில் யுரேனியம் செறிவூட்டும் நிறுவனம் அமைக்கப்படும்.
சிவில் அணுசக்தி திட்டம்
சர்வதேச அணுசக்தி முகமையானது, தனது உறுப்பு நாடுகளை சிவில் திட்டங்களுக்கு அணுசக்தியை பயன்படுத்த அனுமதிக்கிறது. அதேநேரம் அணு ஆயுதம் தயாரிக்கப்படாததை உறுதி செய்யும் நோக்கில் அந்த நாடுகளில் ஆய்வும் மேற்கொள்கிறது.
இந்த முகமையின் உறுப்பு நாடான சவுதி அரேபியா தனது மின்சாரம் தயாரிப்பு உள்ளிட்ட சிவில் தேவைகளுக்கு அணுசக்தியை பயன்படுத்த திட்டமிட்டு உள்ளது. இதற்காக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
குறிப்பாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் காலத்தில் தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் காலத்திலும் நீடித்தது. கடந்த ஆண்டும் அமெரிக்க எரிசக்தி மந்திரி சவுதி அரேபியா சென்று இது தொடர்பாக பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தினார்.
விரைவில் அறிவிப்பு
இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து அணுசக்தி ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒப்புதல் அளித்து உள்ளார். இது தொடர்பான முறைப்படி அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
இதன் மூலம் சவுதி அரேபியா யுரேனியம் செறிவூட்டலுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்காக சவுதி அரேபியாவில் யுரேனியம் செறிவூட்டும் நிறுவனம் அமைக்கப்படும். 30 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் இந்த ஒப்பந்தம், அமெரிக்க நிறுவனங்கள் சவுதி அரேபியாவில் அணுசக்தி திட்டங்களில் ஈடுபட வழிவகுக்கிறது.