Offline
Menu
நீட் விவகாரம்: தீவிரமடைந்த மாணவர்கள் போராட்டம்: 47 அதிகாரிகளை பணி நீக்கம் செய்த என்.டி.ஏ.
By Administrator
Published on 07/26/2026 16:00
News

புதுடெல்லி, ‘நீட்’ வினாத்தாள் கசிந்த விவகாரம் நாடு முழுதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 3-ம் தேதி நடந்தது. வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரை அடுத்து, தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (NTA) ரத்து செய்தது. தொடர்ந்து, கடந்த 21ம் தேதி நீட் மறு தேர்வு நடந்தது. நீட் வினாத்தாள் அடிக்கடி கசிவதால், என்.டி.ஏ. அமைப்பு கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதையடுத்து, ‘அடுத்தாண்டு முதல் நீட் தேர்வு கணினி வழி முறையில் நடத்தப்படும்’ என, பா.ஜ.க, மூத்த தலைவரும், மத்திய கல்வி அமைச்சருமான தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.

தர்மேந்திர பிரதான்

இந்த சூழலில் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தர் பகுதியில் கடந்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்துக்கு பல்வேறு அமைப்பினரும், கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

வன்முறை

இதற்கிடையே நாடாளுமன்றத்தை நோக்கி கடந்த 20-ந்தேதி நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இதில் மாணவர்கள் உள்பட 60-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் காயம் அடைந்தனர். இந்நிலையில் போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தரை விட்டு தற்போது வரை வெளியேறவில்லை. இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க தினமும் ஏராளமான இளைஞர்கள் வெளியூர்களில் இருந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

ஜந்தர் மந்தரை சுற்றி இணைய சேவை முடக்கப்பட்டு இருக்கிறது. மெட்ரோ ரெயில் சேவைகள் தடை செய்யப்பட்டு உள்ளன. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இந்த போராட்டம் நீடித்து வருவது, டெல்லியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படுகிறது.

இதனிடையே நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (CJP) அமைப்பின் கோரிக்கைகளுக்கு இணக்கமான தீர்வைக் காண்பதற்காக, அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர்களான சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோருடன் மத்திய மந்திரிகள் ஜிதேந்திர சிங் மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோர் இன்று( வெள்ளிக்கிழமை, ஜூலை 24) டெல்லியில் உள்ள விட்டல்பாய் படேல் இல்லத்தில் சந்தித்தனர்.

Comments