போர்ட் மோர்ஸ்பி: பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் 670 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மண்ணை தோண்ட தோண்ட சடலங்கள் கிடைத்து வருவதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. பப்புவா நியூ கினியாவின் தலைநகரான போர்ட் மோர்ஸ்பியிலிருந்து சுமார் 660 கி.மீ தொலைவில் உள்ள யம்பலி கிராமத்தில் கடந்த 25ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு காரணமாக நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. முதல் கட்டமாக நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதேபோல 1182 வீடுகள் மண்சரிவில் புதையுண்டுள்ளன.
மொத்தமாக 6க்கும் மேற்பட்ட கிராமங்கள் இதில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், இன்று காலை வெளியான தகவலின்படி மொத்தம் 670 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டிருக்கிறது. தோண்ட தோண்ட சடலங்கள் கிடைப்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட கிராமங்களிலிருந்து வரும் ட்ரோன் காட்சிகள் நெஞ்சை பதற வைப்பதாக இருக்கிறது. பெண்கள் தங்கள் உறவினர்களை தேடி கதறி அழுதிருக்கிறார்கள்.
பேரிடர் மீட்பு படையினரின் வருகை தாமதமாவதால், உள்ளூர் மக்கள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். வீடுகள் 8 மீட்டர் ஆழத்தில் புதைந்துள்ளதால் எங்கு மக்கள் புதைந்திருக்கிறார்கள் என்று தெரியாமல் மக்கள் எல்லா இடங்களிலும் தோண்ட தொடங்கியுள்ளனர்.