Offline
Menu
5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன்: குடிபோதையில் செய்த கொடூரம்
Published on 03/02/2025 14:31
News

போபால்,மத்திய பிரதேச மாநிலம் சிவ்புரியில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் 17 வயது சிறுவன் ஒருவர் மது போதையில் 5 வயது சிறுமியை தனியாக அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். மேலும் சிறுமியை கொடூரமான முறையில் சித்ரவதை செய்துள்ளான்.

உடலில் ரத்தக்கறைகள் மற்றும் பலத்த காயங்களுடன் மயக்கமடைந்த நிலையில் இருந்த சிறுமியை கண்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சிறுமியை சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமிக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அரசு மருத்துவமனை டீன் கூறுகையில்;

“சிறுமி மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அவளது பிறப்புறுப்புப் பகுதியில் பலத்த காயங்கள் இருந்தன. அவளுடைய தாடை மற்றும் தலையில் ஆழமான காயங்கள் இருந்தன. சிறுமிக்கு மொத்தம் 28 தையல்கள் போடப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர் கற்பனை செய்ய முடியாத கொடூரத்துடன் சிறுமியை கையாண்டுள்ளான். கடவுளின் அருளால் சிறுமியின் உயிரை காப்பாற்ற முடிந்தது.” என்றார்.

இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா, “பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு நிச்சயமாக நீதி கிடைக்கும் என்றும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்வதாக உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.

கொடூர செயலில் ஈடுபட்ட 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள போலீஸார் , வழக்கு தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள், இனி இதுபோன்ற கொடூரமான குற்றத்தைச் செய்ய யாரும் நினைக்காத அளவுக்கு குற்றவாளிக்கு தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

Comments