Offline
Menu
ஹட்யாயில் வெள்ளம்: 200க்கும் மேற்பட்ட மலேசியர்கள் சிக்கித் தவிப்பு
By Administrator
Published on 11/23/2025 14:55
News

கோத்தா பாரு:

பிரபலமான தாய்லாந்து சுற்றுலாத் தலமான ஹட்யாயில் இன்று காலை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 200க்கும் மேற்பட்ட மலேசிய சுற்றுலாப் பயணிகள் அங்கு சிக்கித் தவித்து வருவதாக சோங்க்லாவில் உள்ள மலேசிய தூதர் ஜெனரல் அஹ்மத் ஃபஹ்மி அஹ்மத் சர்காவி தெரிவித்தார்.

இன்று நண்பகல் வரை தூதரக அதிகாரிகளுக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் மற்றும் வாட்ஸ்அப் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.

“இன்று அதிகாலை முதல் ஹட்யாய் ஆறு நகருக்குள் பெருக்கெடுத்து ஓடுவதால், அங்கு உள்ள மலேசியர்கள் பதற்றமடைந்து வருகின்றனர். விடுமுறைக்காக வந்த பலர் வெள்ளநீரால் சூழப்பட்டதால் நகரத்தில் சிக்கியுள்ளனர்,” என்று அஹ்மட் ஃபஹ்மி தெரிவித்தார்.

தற்போதைய வானிலை முன்னறிவிப்புகளின் படி, வெள்ளநிலை நீண்ட காலம் நீடிக்காது என்றும் நாளை அல்லது திங்கட்கிழமைக்குள் மழை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சிக்கலில் உள்ள சில மலேசியர்கள், தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்திருந்தாலும், வெள்ளநீரால் உணவுப் பற்றாக்குறை மற்றும் போக்குவரத்து தடையைச் சந்தித்து வருவதாக தூதரகத்திடம் பகிர்ந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் ஹட்யாய் நகரின் உயர்ந்த கட்டிடங்களில் உள்ள ஹோட்டல்களில் தங்கியுள்ளனர்.

“நகர மையத்தின் பெரும்பாலான சாலைகள் நீரில் மூழ்கியுள்ளதால், சாதாரண வாகனங்கள் இயக்க முடியவில்லை. இடுப்பு மட்டத்திற்கு உயர்ந்துள்ள நீரில் தற்போது படகுகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, ஒரு மலேசியப் பெண்ணும் அவரது இரண்டு குழந்தைகளும் தங்கியிருந்த ஹோட்டலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், குழந்தைகளுக்கு பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இன்னும் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் மலேசியர்கள் உடனடியாக தூதரகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார், இதனால் மீட்பு மற்றும் உதவி ஒருங்கிணைப்பு விரைவாக செய்யப்படலாம்.

“அவர்களின் பாதுகாப்பிற்காக, அவர்கள் தங்கியுள்ள ஹோட்டல்களை விட்டு வெளியேற வேண்டாம்,” என்று அவர் எச்சரித்தார்.

மேலும், வெள்ளம் ஏற்படக் கூடிய பகுதிகளான ஹட்யாய் மற்றும் அருகிலுள்ள தாய்லாந்து நகரங்களுக்கு பயணத் திட்டங்களை மலேசியர்கள் தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும் என்றும் கூறினார்.

Comments