மலேசியாவின் சபா (Sabah) கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் இன்று அதிகாலை 7.1 ரிக்டர் அளவில் மிக வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 620 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், சபா, சரவாக் மற்றும் சிங்கப்பூர் வரை இதன் அதிர்வுகள் உணரப்பட்டன. நிலநடுக்கம் மிக ஆழமான பகுதியில் ஏற்பட்டதால், கடலில் பெரும் இடப்பெயர்வு ஏற்படவில்லை. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
மலேசிய வானிலை ஆய்வுத் துறை இந்த நிலநடுக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளதுடன், நிலமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. உயரமான கட்டிடங்களில் இருந்த மக்கள் அதிர்வுகளை உணர்ந்ததாகத் தெரிவித்தாலும், பெரிய அளவிலான சேதங்களோ அல்லது உயிரிழப்புகளோ இதுவரை பதிவாகவில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசரகால மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் ஏற்பட்டு வரும் இந்த நில அதிர்வுகள் மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. தாய்லாந்து போன்ற அண்டை நாடுகளில் பெரிய நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்ற வதந்திகள் பரவிய நிலையில், அவை உண்மைக்கு புறம்பானவை என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது. பொதுமக்கள் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.