Offline
Menu
உக்ரைன் மீது நள்ளிரவில் ரஷியா தாக்குதல்: ஒருவர் பலி; 16 பேர் காயம்
By Administrator
Published on 07/21/2026 08:00
News

கீவ் உக்ரைன் மீது நள்ளிரவில் ரஷியா நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகி உள்ளார். 16 பேர் காயம் அடைந்தனர்.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷியா, கடந்த 2022-ம் ஆண்டு தாக்குதல் நடத்தியது. உக்ரைனும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இரு நாடுகளின் மோதல் 5-வது ஆண்டாக தொடர்ந்து வருகிறது.

டிரோன்கள் தாக்குதல்

இந்த சூழலில், ரஷியா மீது உக்ரைன் நேற்று முன்தினம் நள்ளிரவில் நடத்திய டிரோன்கள் தாக்குதல்களில் 7 பேர் பலியாகி உள்ளனர். 50 பேர் காயம் அடைந்துள்ளனர். ரஷியாவின் முக்கிய ஆயுத உள்கட்டமைப்புகள் மீது டிரோன்களை கொண்டு உக்ரைன் தாக்குதலில் ஈடுபட்டது. எண்ணெய் நிறுவனம் ஒன்றும் தாக்குதலுக்கு இலக்கானது.

நீண்டதூர இலக்குகளை தாக்கி அழிக்கும் டிரோன்கள் இந்த தாக்குதல்களில் ஈடுபட்டன. இந்த சூழலில், பதிலடியாக உக்ரைனின் கீவ் நகர் மீது நேற்று நள்ளிரவு, பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை கொண்டு ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது.

உக்ரைன் அதிபர்

இந்த சம்பவத்தில் ஒருவர் பலியாகி உள்ளார். 16 பேர் காயம் அடைந்தனர். இரவு 1.30 மணியளவில் தொடங்கி, இன்று அதிகாலை வரை பல மணிநேரம் நடந்த இந்த தாக்குதலின் வெடிச்சத்தம் தலைநகரம் முழுவதும் எதிரொலித்தது.

இதுபற்றி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, உக்ரைனை இலக்காக கொண்டு நள்ளிரவில் 41 ஏவுகணைகள், 125 டிரோன்கள் தாக்கின. கீவ் நகரின் 5 மாவட்டங்களில் அதன் தாக்கம் உணரப்பட்டது. குடியிருப்பு கட்டிடங்கள், அலுவலகங்கள் மற்றும் ஆலைகள், வாகனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன என உக்ரைன் அவசரகால சேவை அமைப்பு தெரிவித்து உள்ளது.

Comments