ஐந்து வயது சிறுவன் கொலை வழக்கு தொடர்பில் பினாங்கு நீதிமன்றத்தில் இந்தோனேசியப் பெண் மற்றும் பங்களாதேஷ் காதலன் மீது குற்றச்சாட்டு!
பினாங்கு, சுங்கை துவா பகுதியில் ஐந்து வயது சிறுவன் ஒருவன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், இந்தோனேசியப் பெண் மற்றும் அவரது வங்காளதேச நாட்டைச் சேர்ந்த காதலன் மீது மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 23-ஆம் தேதி நடைபெற்ற இச்சம்பவத்தில் சானி (34) மற்றும் தினா ஹயாத்தி (30) ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட இவ்வழக்கில் அவர்களின் தரப்பில் இருந்து எந்தவொரு மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை.
சிறுவனின் உடலில் காயங்கள் கண்டறியப்பட்டு மருத்துவமனை ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட இவர்கள் மீது, குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
இரசாயன மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கைகளுக்காக வழக்கு விசாரணை வரும் அக்டோபர் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.