தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கேற்ப சமூகப் பாதுகாப்புப் பலன்களும் விகிதாச்சார அடிப்படையில் உயரும் என்று பெர்கசோ துணைத் தலைமைச் செயல் அதிகாரி எட்மண்ட் சியோங் பெக் ஹூவாங் தெரிவித்தார். கோலாலம்பூர் இன்டர்காண்டினென்டல் விடுதியில், மலேசியத் தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு நிறுவனம் (பெர்கேசோ), மலேசிய ஊடக நிறுவனம் இணைந்து நடத்திய “ஊடக விழிப்புணர்வு அமர்வு, பெர்கசோ ‘ஐ லிண்டு யூ’ ஊடக விருது 2026” அறிவிப்பு நிகழ்வு நடைபெற்றது.
விபத்துகள், உயிரிழப்புகள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டி பேசிய எட்மண்ட், ‘லிண்டுங் 24 ஜாம்’ திட்டம் திடீரென அறிமுகப்படுத்தப்படவில்லை என்றும், 2017-2018-ஆம் ஆண்டுகளிலேயே விவாதிக்கப்பட்டு அமைச்சரவை, நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது எனவும் விளக்கினார். முதலாளிகள், தொழிலாளர்களின் நலன் கருதி தொடக்கக் கட்டணம் 0.75 விழுக்காட்டிலிருந்து தொடங்கப்பட்டு, 6-வது ஆண்டில் 1.25 விழுக்காடாக உயர்த்தப்படும் என அவர் தெளிவுபடுத்தினார்.
0.75 விழுக்காட்டுக் கட்டணம் மூலம் முறையான மருத்துவப் பலன்கள் தடையின்றி வழங்கப்படும் என்றும், இத்திட்டத்திலிருந்து ஏற்கனவே விலகியவர்கள் மீண்டும் இணைந்து கொள்ளலாம் என்றும் எட்மண்ட் தெளிவுபடுத்தினார்.மக்கள் ஓசை இயக்குனர் டத்தோ கோபாலகிருஷ்ணன் சண்முகமணி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்த இந்நிகழ்ச்சியில் பேசிய பிராந்தியம், ஊடக, மக்கள் தொடர்புப் பிரிவுத் தலைவர் தெங்கு டத்தோ காலிடா தெங்கு பிடின், ஊடகவியலாளர்களைச் சமூகப் பாதுகாப்புத் துறையின் உத்தேச பங்காளிகளாகக் கருதுவதாகத் தெரிவித்தார்.
‘ஐ லிண்டு யூ’ ஊடக விருது குறித்து விளக்கிய அவர், 2026-இல் 5 வகையான பிரிவுகள் உள்ளதாகவும், இம்முறை “கெஞ்சான லிண்டுங் செமுவா” என்ற சிறப்பு விருது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.