நெகிரி செம்பிலான், சிரம்பானைச் சுற்றியுள்ள மூன்று வெவ்வேறு இடங்களில் உள்ள பட்ஜெட் ஹோட்டல்களை மையமாகக் கொண்டு இயங்கி வந்த விபச்சாரக் கும்பலை குடிநுழைவுத் துறை (JIM) அதிகாரிகள் அதிரடியாகச் சோதனையிட்டு முறியடித்துள்ளனர்.
நேற்று பிற்பகல் 2 மணியளவில் மலேசியாவிலுள்ள இந்தோனேசிய தூதரகத்தின் (KBRI) ரகசியத் தகவலின் அடிப்படையில் இச்சோதனை நடத்தப்பட்டது.
இந்த நடவடிக்கையில் 19 முதல் 65 வயதுக்குட்பட்ட 57 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 7 உள்ளூர் ஆண்கள், 3 இந்தோனேசிய ஆண்கள், 12 வங்காளதேச ஆண்கள் மற்றும் 3 மியன்மார் ஆண்கள் அடங்குவர். அதேநேரம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 26 இந்தோனேசியப் பெண்கள், 5 வங்காளதேசப் பெண்கள் மற்றும் 1 இந்தியப் பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சோதனையின் போது பல்வேறு வெளிநாட்டுப் கடப்பிதழ்கள் (Passport), கைபேசிகள், கட்டிடச் சாவிக் கொத்துக்கள் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக, குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜகாரியா ஷாபான் கூறினார்.
பட்ஜெட் ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்களை நாளாந்திர அல்லது வாராந்திர அடிப்படையில் வாடகைக்கு எடுத்து, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நபர்கள் ‘கேப்டன்களாக’ செயல்பட்டு இந்த நெட்வொர்க்கை நிர்வகித்து வந்துள்ளனர்.
வெளிநாட்டுப் பெண்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முறை பாலியல் சேவை வழங்க RM50 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடமாகச் சீரான கட்டமைப்புடன் இயங்கி வந்த இந்த சட்டவிரோதத் தொழில் மூலம் ஆண்டுக்கு சுமார் RM540,000 வரை வருமானம் ஈட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
உள்ளூர்வாசிகளான 7 நபர்கள் மீதும் குடிநுழைவுச் சட்டம் 1959/63-இன் பிரிவு 6(1)(d)-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டினர் மீது தகுந்த குடிநுழைவுச் சட்டப் பிரிவுகள் (செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமை, விசா காலாவதி போன்றவை) மற்றும் குடிநுழைவு விதிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.