பாங்காக்,தாய்லாந்தில் கடந்த 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர் தக்சின் ஷினவத்ரா. இவர் தனது பதவிக்காலத்தில் நடைமுறைப்படுத்திய திட்டங்கள் மூலம் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அவர் பதவி விலகினார். இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் அவர் மீது அதிகார துஷ்பிரயோக வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் அவர் வெளிநாடு தப்பி ஓடினார்.
15 ஆண்டுகளுக்கு பிறகு அவர் கடந்த 2023-ம் ஆண்டு நாடு திரும்பினார். அப்போது பாங்காக் விமான நிலையத்திலேயே போலீசார் அவரை கைது செய்தனர். இதற்கிடையே அதிகார துஷ்பிரயோக வழக்கில் அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அந்த தண்டனையை ஓராண்டாக குறைத்து மன்னர் மகா வஜிரலங்கோர்ன் உத்தரவிட்டார். ஆனால் உடல் நலக்குறைவை காரணம் காட்டி அவர் 6 மாதங்கள் ஆஸ்பத்திரியிலேயே தண்டனை காலத்தை கழித்தார்.
இந்தநிலையில் தக்சின் மீதான சிறை தண்டனை ஒழுங்காக நிறைவேற்றப்படவில்லை என வழக்கு தொடுக்கப்பட்டது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கும் அளவுக்கு அவரது உடல் நிலை மோசமாக இல்லை. எனவே அவரை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்டு உள்ளது.