புதுடெல்லி ,‘பிடே’ கிராண்ட் சுவிஸ் செஸ் தொடர் உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரில் நடந்து வந்தது. இதில் மகளிர் பிரிவில் நேற்று நடந்த 11-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் வைஷாலி 43-வது காய் நகர்த்தலில் முன்னாள் உலக சாம்பியன் சீனாவின் டான் ஜோங்ஜியுடன் ‘டிரா’ செய்தார். 11-வது சுற்று முடிவில் தமிழகத்தை சேர்ந்த வைஷாலியும் (6 வெற்றி, 4 டிரா, ஒரு தோல்வி) ரஷியாவின் கேத்ரினோ லாக்னோவும் (5 வெற்றி, 6 டிரா) தலா 8 புள்ளிகளுடன் சமநிலை வகித்தனர். இருப்பினும் அதிக வெற்றி அடிப்படையில் வைஷாலி தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
இந்த நிலையில் வைஷாலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சிறந்த சாதனை செய்துள்ள வைஷாலி க்கு வாழ்த்துகள். அவரது ஆர்வமும் அர்ப்பணிப்பும் முன்மாதிரியானவை. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள். என தெரிவித்துள்ளார்.