புதுடெல்லி,பிரபல மலையால நடிகரும், 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவருமான மோகன்லாலுக்கு சினிமா துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், மோகன்லாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”திறமை மற்றும் நடிப்பில் பன்முகத் தன்மையின் ஓர் அடையாளம்தான் மோகன்லால். பல்லாண்டுகால தனித்துவமான கலைப் பயணத்தின் மூலம், கேரள கலாசாரத்தில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் மலையாள சினிமா மற்றும் நாடகத்தில் முக்கிய நபராக திகழ்கிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களிலும் அவரின் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார்.
தாதா சாகேப் பால்கே விருதுபெற்ற அவருக்கு எனது வாழ்த்துகள். அவரின் வருங்காலச் சாதனைகள், வருங்காலச் சந்ததியினருக்கு ஊக்கமளிக்கட்டும்”என்று தெரிவித்துள்ளார்.